கவிதைப்பேழை
இயல் 5
பெருமாள் திருமொழி
-குலசேகராழ்வார்
நுழையும்முன்
தமிழர் பண்டைய நாள்களில் இருந்து மருத்துவ ஆளுமையோடு திகழ்கின்றனர். இதன் தாக்கங்கள் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. பக்தி இலக்கியங்களிலும் மருத்துவச் செய்திகள் செறிந்து இருப்பதனைப் பதிவு செய்துள்ள பாடல் ஒன்று பாடமாக…
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
பாசுர எண் : 691
குலசேகராழ்வார்
பாடலின் பொருள்
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.
சொல்லும் பொருளும்
சுடினும் - சுட்டாலும்,
மாளாத - தீராத,
மாயம் - விளையாட்டு
வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.
நூல்வெளி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் உள்ள 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில், 105 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.
இப்பாடத்தின் POWER POINT PERENTATION ( PPT ) ஐ
PDF வடிவில் பெற Click Here